மனநலப் பாதுகாப்பை நனவாக்குவோம்!

இந்து தமிழ் திசை, இணைய பக்கத்தில் வெளியான என் கட்டுரை, அக்.10, 2021

மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவை அந்நபருடைய உளவியல், உடலியல் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது ஆகும்.

மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், உலகில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலச் சிக்கலால் அவதியுறுகிறார்கள். குறைவான வருமானம் உள்ள நாடுகளில் மனநலச் சிக்கலோடு வாழும் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதேயில்லை. ஒவ்வோர் ஆண்டும், போதை / மதுவினால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

வாழ்வைச் சிக்கலுக்கு இட்டுச் செல்லும் மனநலப் பிரச்சினைகள் குறித்து உலகெங்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று ‘உலக மனநல நாள்’ உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அவரே பேச வைப்பார்

மனவியல், உளவியல் பிரச்சினைகளால் துன்புறுகிறவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கோவில்கள், நண்பர்கள், பெரியவர்கள், பேய் ஓட்டுதல் என ஒவ்வொருவரிடமும் அழைத்துச்சென்று காலத்தைச் சிலர் வீணடிக்கிறார்கள். நண்பர்களும் பெரியவர்களும் தவறாகவா வழிகாட்டுவார்கள்எனக் கேட்கலாம். அப்படியல்ல. ஓர் உதாரணம் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் திடீரென நோயுற்றார். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிந்தது. வயிற்றில் புற்றுநோய் இருக்குமோ என்கிற ஐயத்தில் அடுத்தடுத்த பரிசோதனைகள் தொடர்ந்தன. ‘வருவதை ஏற்றுக்கொள்ளவும் தைரியமாக இருக்கவும்’ பலரும் அப்பெண்ணுடன் பேசினார்கள். இரண்டு வாரம் கழித்து, ஆற்றுப்படுத்துநரும் பேசினார். ஆற்றுப்படுத்துநருடனான சந்திப்புக்குப் பிறகு “இப்போது எப்படி இருக்கிறது?” என அப்பெண்ணிடம் குடும்பத்தினர் கேட்டார்கள். “இவர் என்னைப் பேச வைத்தார். இப்போது மனம் லகுவாக இருக்கிறது” என்றார் அப்பெண். ஆமாம், நண்பர்களும் பெரியவர்களும் பேசுவார்கள், அறிவுரை சொல்வார்கள். ஆற்றுப்படுத்துநர், மனநலச் சிக்கலில் உள்ளவரைப் பேச வைப்பார். பாதிக்கப்பட்டவரே முடிவெடுக்க வழிகாட்டுவார்.

ஒத்துழைப்பும் பொறுமையும்

நாம் மருத்துவமனைக்குச் செல்லும்போது, நோய்க்கான காரணத்தை அறிய அலோபதி மருத்துவர் பல்வேறு பரிசோதனைகள் செய்யச் சொல்வார். என்ன நோய் என்பதையும் அதன் தீவிரத்தையும் பரிசோதனையின் முடிவுகள் தெளிவுபடுத்தும். தேவையேற்படின் மேலதிக பரிசோதனை செய்யவும் மருத்துவர் பரிந்துரைப்பார். என்ன நோய் எனக் கண்டறிந்தபிறகு சிகிச்சை தொடங்குவார். நாம் விரும்பாமல் விழுங்கினால்கூட, தூங்கினாலும் விழித்திருந்தாலும் மருந்து குணமளிக்கும் பணியைச் செய்யும்.

மனநல சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. சுகம் பெற வேண்டுமென்றால் நோயுற்றவரின் முழு ஒத்துழைப்பு அவசியம். என்ன நோய் என்பதையும் அதன் காரணத்தையும் புரிந்துகொள்ள அடுத்தடுத்த கேள்விகளோடு மனநல மருத்துவர் வழிநடத்தும்போது எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும். வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிகழ்வுதான் நோயின் தூண்டுதலாக (Triggering Point) இருந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நோயின் தீவிரத்தைக் கண்டறிய சில பயிற்சிகள் கொடுக்கும்போது தவறாமல் செய்ய வேண்டும்.

நேடியாகச் சென்று பார்க்க இயலாத இதுபோன்ற கரோனா காலத்தில் மெய்நிகர் ஆற்றுப்படுத்துதல் / உளவியல் சிகிச்சைகள் உலகெங்கும் வளர்ந்து வருகின்றன. மெய்நிகர் வழியாக வழிகாட்டுதல் வேண்டுகிறவர் மனதளவில் தயாராக இருப்பதுடன் அலைபேசியில் போதுமான அளவு சார்ஜ் ஏற்றி, இணைய வசதி உள்ள, கவனச்சிதறல் ஏற்படாத இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். சில அமர்வுகளுக்குப் பிறகுதான் தேவையிருப்பின் சிகிச்சைகள் தொடங்கும். நடத்தைசார் மாற்றங்கள் (Behavioral changes), எண்ணங்களைச் சீர்படுத்துவது (Cognitive reframing) அல்லது மேற்சொன்னவற்றுடன் மாத்திரையும் சேர்த்துப் பரிந்துரைப்பது எனச் சிகிச்சைகள் மாறுபடும். துரித உணவகம்போல துரித சுகம் வாய்ப்பில்லை என்பதால் பொறுமை அவசியம்.

உளவியல் முதல் உதவி

திருட்டு, வன்முறை, தீவிரவாத தாக்குதல், புயல், வெள்ளம், பூகம்பம், தீ மற்றும் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களும், குழந்தைகளையும் உறவினர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள பெற்றோரும் உற்றாரும் அதிர்ச்சியிலும்ஆற்றாமையிலும் உழல்வார்கள். அவ்வேளைகளில், பெரும்பாலும் குடும்பத்தினர், அண்டைவீட்டார், ஆசிரியர்கள் அல்லது யாரோ ஒருவர் அருகில் இருப்பார்கள். சில நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் வருவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இவர்கள் அளிக்கும் ‘உளவியல் முதல் உதவி’ காலத்தாற் செய்த உதவியாக மிகுந்த பலனளிக்கும். பாதுகாப்பு உணர்வு, மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது, உணர்வுரீதியான ஆதரவு, மனம் அமைதியடைவது, உள்ளிட்டவை தங்களைத் தாங்களே வலுப்படுத்தவும், ஆற்றல்களை மீட்டெடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

எனவே, மாணவர்களுக்கும், ஒவ்வொரு துறைசார் பணியாளர்களுக்கும் உளவியல் முதல் உதவி குறித்து அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது,

(1) மனிதாபிமானத்துடன் கூடிய ஆதரவும் அக்கறையும் காட்டுதல்
(2) உடனடித் தேவை என்ன என மதிப்பிடுதல்
(3) உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல்
(4) அவர்கள் பேசுவதைக் கேட்டல். ஆனால், பேசுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
(5) மனம் அமைதியடைய உதவுதல்
(6) தேவையான தகவல்கள், சேவைகள், மற்றவர்களின் ஆதரவைப் பெற உதவுதல்
(7) கூடுதலாக, உடல்/மன காயம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்தல்
(8) பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், உரிமைகளை மதித்தல்.

உளவியல் படிப்போம்

உலக அளவில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. 2017 நிலவரப்படி உலகில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒன்பதுமனநல மருத்துவர்களே இருப்பதாக ஜான் எஃப்லய்ன் தன் ஆய்வில் (2021) குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக ஐரோப்பாவில் 50 பேர் இருப்பதாகவும், அமெரிக்காவில் 10.9, மேற்கு பசிபிக் நாடுகளில் 10, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் 7.7, ஆப்பிரிக்க நாடுகளில் 0.9, வங்கதேசம், பாக்கிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் 2.5 பேர் மட்டுமே இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் கல்லூரிகளில் உளவியல் பாடப்பிரிவு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட அளவில் மனநல மருத்துவமனைகளும், தாலுகா அளவில் ஆற்றுப்படுத்தும் மையங்களும் தொடங்கப்பட வேண்டும். தொலைக்காட்சி வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் மனநலன் குறித்த தொடர் விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்.

அக்டோபர் 10: உலக மனநல நாள்

சூ.ம.ஜெயசீலன்

sumajeyaseelan@gmail.com

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

2 thoughts on “மனநலப் பாதுகாப்பை நனவாக்குவோம்!

  1. மன நலம் பற்றி புரிந்து கொண்டு வழிகாட்ட உதவும் எளிய கட்டுரை 🙏

    Like

  2. இன்றைய வேகமான உலகில் பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பது நம்மைக் கையாளுவதில் நாம் பெறும் வெற்றியை அடைய மனநலம் குறித்த விழிப்புணர்வு சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியம்.என்பதை சொல்லிச்செல்லும் கட்டுரை. மனிதநேயம் கலந்த அருமையான கட்டுரை, பிறரின் உணர்வுகளை மதித்து அவர்களை ஆற்றுபடுத்துவது ஒரு கலை.
    இன்றைய மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த தேவைகளை குறித்து வகுப்புகள் பள்ளிகளிலில் அமைக்க வேண்டும் என்ற புரிதலைக்கொடுத்த கட்டுரை .நன்றி

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started